WEL COM TO RAFEEQI TRQVELS LALPET

AIR TICKET,TRAIN TICKET,BUS TICKET,PASSPORT SERVICE AND RECHARGE AVAILABLE HERE

Sunday, January 22, 2017

கடற்கரைக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் சென்னை காவல்துறையால் முடக்கம்

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். கடற்கரைக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு கோரியும், பீட்டா அமைப்புக்குத் தடை கோரியும் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் வழங்கினார். இதனால், ஜல்லிக்கட்டு மீதான தடை உடனடியாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மதுரை புறப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் எனக் கூறிச் சென்றார்.
ஆனால், மதுரை அலங்காநல்லூர், சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போராட்டம் வாபஸ் பெறவில்லை. ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கொண்டுவரும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
போராட்டத்தைக் கைவிட வேண்டுகோள்
மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட பலர் வேண்டுகோள் விடுத்தனர்.
இளைஞர்கள் போராட்டத்தை மார்ச் 31 வரை தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கேயம் காளை அறக்கட்டளை தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த செய்தியாளர் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்குப் பிறகும் இளைஞர்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்தனர்.
போர்க்களமான மெரினா
இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலையில் மெரினாவில் நூற்றுக்கணக்கான போலீஸார் திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். மாணவர்கள், இளைஞர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தத் தொடங்கினர். முதலில், பெண்கள், குழந்தைகள் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சிலர் தாங்களாகவே வெளியேறினர். ஆனால், போராட்டக்காரர்கள் பலரும் கடலை நோக்கி ஓடினர். அங்கேயே மனிதச் சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மெரினா கடற்கரை போராட்டக்களம் சில மணித்துளிகளில் போர்க்களமானது.






அலங்காநல்லூர் - தமிழக அரசின் அவசர சட்டம் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதையடுத்து, அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என தெரிகிறது. இதற்காக வாடிவாசல்களை மதுரை கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு ஒரே நாளில் மத்திய அரசு அனுமதி அளித்து, ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து, ஜனாதிபதி ஒப்புதல் பெற்று இன்று மாலை அவசரச் சட்டம் வெளியாக உள்ளது. இதற்கிடையே, ஜல்லிக்கட்டு நடந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று இளைஞர் கூட்டம் அறிவித்துள்ளதால், நாளையே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டுக்கு வந்து வாடிவாசல்களை மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

 அலங்காநல்லூரில் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் என அப்பகுதி மக்கள், காளை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர். அலங்காநல்லூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 250க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் தற்போது தயார் நிலையில் உள்ளன என்றும், நாளையே ஜல்லிக்கட்டை நடத்தினாலும் அருகே திண்டுக்கல், தேனி, திருச்சி மாவட்டங்களில் இருந்து உடனடியாக காளைகள் வந்து களத்தில் இறங்கி விடும் என்றும் அவர்கள் கூறினர்.
அலங்காநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ் கூறுகையில், 'கடந்த 2 வருடங்களாக ஜல்லிக்கட்டு நடக்காத நிலையிலும், நம்பிக்கையுடன் நான் காளைகளை பராமரித்து வருகிறேன். ஜல்லிக்கட்டை உடனே நடத்தினாலும், என்னிடம் உள்ள காளைகள், தயாராக உள்ளன. பஞ்சு என்ற பெண் கூறுகையில், 'கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்காதாதால் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இப்போது வாடிவாசலில் அவிழ்த்து விட காளைகளை தயாராக வைத்துள்ளோம்’’ என்றார்.

குமார் கூறுகையில், 'நான் 4 காளைகளை வளர்த்து வந்தேன். கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்காததால், பல லட்சம் மதிப்புள்ள 3 காளைகளை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டேன். ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையில், ஒரே ஒரு காளையை தொடர்ந்து பராமரித்து, பயிற்சி அளித்து தயாராக வைத்துள்ளேன். அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தற்போது மீண்டும் கிராக்கி ஏற்பட்டுள்ளது’’ என்றார். ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற அறிவிப்பையடுத்து, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் காளைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அலங்காநல்லூர், வாடிப்பட்டி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் பகுதிகளில் காளை வளர்ப்போர் மற்றும் விற்போரிடம் காளைகளை விலைக்கு வாங்க ஏராளமானோர் போட்டியிடுகின்றனர் ..